துவக்க வீரராக கோலி * கவாஸ்கர் எதிர்பார்ப்பு

நியூயார்க்: ''உலக கோப்பை தொடரில் இந்திய அணி துவக்க வீரராக கோலி களமிறங்க வேண்டும்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து, சஞ்சு சாம்சன் துவக்கம் தந்தார்.
இதனால், இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து யார் துவக்க வீரராக வருவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' கவாஸ்கர் கூறியது:
உலக கோப்பை தொடரில் ரோகித்துடன் இணைந்து கோலி துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில் வரலாம். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்குப் பதில், ரிஷாப் பன்ட் இடம் பெற வேண்டும். இதன்படி 4, 5வது இடத்தில் சூர்யகுமார், ரிஷாப் பன்ட் பேட்டிங் செய்ய வேண்டும்.
அடுத்தடுத்த இடங்களில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா வர வேண்டும். ஷிவம் துபேவை 9வது இடத்தில் களமிறக்க வேண்டும். இந்த பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. பின் குல்தீப், பும்ரா, சிராஜ் விளையாடலாம்.